பழனியில் நாளை வைகாசி விசாக விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
பழனி: பழனியில் வைகாசி விசாகம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 4ம் தேதி திருக்கல்யாணமும், 5ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்று. இத்திருவிழாவின் போது முத்துக்குமாரசுவாமிக்கு வசந்தமாலை அணிவிக்கப்பட்டு அவர் தினமும் திருவுலா வருவதால் இதற்கு வசந்தோற்சவம் என்ற பெயரும் உள்ளது.
இத்திருவிழா நாளை காலை 11.10 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலையில் முருக பெருமான் சப்பரத்தில் வீதி உலா வருகிறார்.
அடுத்து வரும் 10 நாட்களுக்கும் முருகன் பெருமான் காலையில் தங்க பல்லாக்கிலும், மாலையில் கற்பக விருட்சகம், தங்க மயில் வாகனம், தங்க குதிரை, வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
4ம் தேதி திருக்கல்யாணம்...
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் ஜூன் 4ம் தேதி நடக்கிறது. விருச்சிக லக்னத்தில் காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் முத்துக்குமாரசாமிக்கும், வள்ளி, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
5ம் தேதி தேரோட்டம்...
மறுநாள் ஜூன் 5ம் தேதி வைகாசி விசாகமாகும். இதையடுத்து மதியம் 12 மணி முதல் 1 மணி வரை தேர் ஏற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு பக்த கோடிகள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் ஆரம்பமாகி நான்கு ரத வீதிகளில் உலா வருகிறது.