'வெறிச்' குற்றாலம்-ஜெர்மன் பயணிகள் ஏமாற்றம்
குற்றாலம்: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து போக்கு காட்டி வரும் நிலையில் குற்றாலத்தில் நீர் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதையடுத்து அங்கு குளிக்க வந்த ஜெர்மன் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் அருவிகளில் நீர் பொங்கி வழியும். மழை நீருடன் மலையில் இருக்கும் முலீகைகளும் நீரில் கலந்து வருவதால் பலவித வியாதிகள் இங்கு குளித்தவுடன் குணமடையும் ஆபூர்வ சக்தி கொண்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக மே 24ம் தேதி துவங்கும் என கூறப்பட்டது. இது உண்மை என்பது போல் இரண்டு தினங்கள் சாரல் பெய்தது. இதை தொடர்ந்து அருவிகளில் நீர் கொட்டியது.
ஆனால் அதன் பின்னர் நேற்று வரை சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக சாரல் இல்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மெயினருவியில் பாறையை ஓட்டினற்போல் சிறிதளவு தண்ணீர் கசிகிறது. இதையடுத்து குற்றாலம் மெயினருவி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் மட்டுமே தண்ணீர் லேசாக விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் அடியோடு நின்று விட்டது.
இந்நிலையில் சென்னை வந்த ஜெர்மன் பயணிகள் சிலர் குற்றாலத்தின் சிறப்பை அறிந்து நேற்று அங்கு குளிக்க வந்தனர். தங்கள் நாட்டில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா ஸ்பா நீர்வீழ்ச்சிக்கு இணையாக கருதப்படும் குற்றாலத்தையும், மெயினருவியின் பிரமண்டமான தோற்றத்தையும் பார்த்து அதிசயித்தனர்.
ஆனால், அருவிகளில் தண்ணீர் விழாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.












Click it and Unblock the Notifications