இதயம் வலுப்பெற இலக்கியம் உதவும்: இறையன்பு
எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய 'கங்கையில் ஒரு சங்கமம்' நூலை வெளியிட்டு இறையன்பு பேசுகையில்,
சிறந்த இலக்கியப் படைப்புகள் நமக்குள் எண்ண அலைகளை ஏற்படுத்தும். மிகச் சிறந்த நூல்கள் குறைவான பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும், நம்மை அதிக நேரம் சிந்திக்க வைக்கும்.
நமக்கு முன் எழும் கேள்விகளுக்கு அறிவால் விடை தேட முயற்சிக்க வேண்டும். மூளையின் திறன் வளர அறிவு உதவும். இதயம் வலுப்பெற இலக்கியம் உதவும்.
மக்களை நல்வழிப்படுத்துவது, அவர்களுக்குள் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவை இலக்கியத்தின் பங்காக இப்போது மாறியுள்ளது.
இளைஞர்களுக்கு படித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் முன்பு இருந்தது. இதனால் புத்தகங்கள் படிப்பதை அவர்கள் தவமாகக் கொண்டிருந்தனர். ஆனால், காலப்போக்கில் இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் சுருங்கிவிட்டது.
சவால்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், போராட்டங்களை இளைஞர்கள் எந்த அளவுக்கு தங்களின் வாழ்வில் சந்திக்கிறார்களோ அந்த அளவுக்குச் சாதனை படைப்பார்கள்.
பெற்றோரின் அரவணைப்பில் அதிகம் இருக்கும் குழந்தைகள் பின்னாளில் முருங்கை மரத்தைப் போல வலுவிழக்க நேரிடும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் இதய மருத்துவ நிபுணர் என்.சிவகடாட்சம், தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நிர்வாகி ராமசுப்பையா, நூலாசிரியர் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஆகியோர் பங்கேற்றனர்.