திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷகம்-இன்று யாகசாலை பூஜை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் வரும் ஜூலை 2ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் சுமார் 11.15 மணிக்குள் நடக்கிறது.
இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று மாலை துவங்குகிறது. மூலவர் சுப்பிரமணி சுவாமிக்கு கோவில் உள்ளேயும், உற்சவ மூர்த்தி சண்முகருக்கு கோவிலுக்கு வெளியே ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று கோவிலில் அக்னி சங்கரணம் நடந்தது. அப்போது யாகத்துக்கு தேவையான அக்னி சூரியனிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டது. காலை 10.30 மணிக்கு நடந்த இந்த விழாவி்ல் மண் பாத்திரத்தில் கற்பூரம், பஞ்சு ஆகியவை வைக்கப்பட்டது. பின்னர் சூரிய ஒளி லென்ஸ் மூலம் அதில் குவிய செய்யப்பட்டு அக்னி பெறப்பட்டது.
பின்னர் நாழி கிணற்றில் இருந்து யாகசாலைக்கு தேவையான நீரை எடுத்து வரும் தீர்த்த சங்கரணம் நடந்தது. அக்னி மற்றும் தீர்த்த சங்கரணங்களை மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் சுமந்து வந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு 7.30 மணிக்கு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு யாகசாலைக்கு புனித மண் எடுத்து வரப்பட்டது. இதை கோவில் யானை மூலம் சிவாச்சாரியர்கள் கொண்டுவந்தனர்.
ஜூலை 2ல் உள்ளூர் விடுமுறை...
இந்நிலையில் திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுத்துறை செயலாளர் தேவ.ஜோதி ஜெகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தி்ல் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளம் வகையில் ஜூலை 2ம் தேதி விடுமுறை அளிக்குமாறும், இந்த விடுமுறையை சரிசெய்யும் வகையில் வரும் ஜூலை 11ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாற்ற வேண்டும் எனவும் தூத்துக்குடி கலெக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட கலெக்டரின் இந்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்கிறது. அதே நேரத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் தூத்துக்குடி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.