சூரிய கிரகணம்-22ம் தேதி திருப்பதி கோவில் மூடப்படும்
திருப்பதி: வரும் 22ம் தேதி நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மூடப்படும் என கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வரும் நிலவின் நிழல் சூரியனின் மேல் விழுவதை சூரிய கிரகணம் என்கிறார்கள். வரும் 22ம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளை சார்ந்தவர்களும் கண்டு களிக்கலாம். மேலும், இது தான் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் கடைசி சூரிய கிரகணமாகும்.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி கிருஷ்ணா ராவ் கூறுகையில்,
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் திருக் கோவில் மூடப்படுவது வழக்கம். இதையடுத்து வரும் 21ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் அதிகாலை 8 மணிக்கு வரைக்கும் கோவில் மூடப்படும்.
இந்த சமயத்தில் நடக்கவிருந்த சகஸ்ர அலங்கார சேவை, சுப்ரபாத சேவை, தேர் மாலை சேவை, அர்ச்சனை சகஸ்ரகலச அபிஷேகம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்படம். சுமார் 3 மணிக்கு நேரம் நடக்கும் இந்த பணிகளுக்கு பின்னர் சுமார் 11 மணிக்குமேல் மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.