மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அஞ்சலி
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அஞ்சலி செலுத்தின.
1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது. இதிலிருந்து தப்பியோடும்போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அவர்களின் நினைவாக ஜூலை 23ம் தேதி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பாமக மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தாமிரபரணி ஆற்றில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை மள்ளர் மீட்பு கழகத்தினர், இ.கம்யூ, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர் பேரவை, புரட்சி பாரதம் கட்சியினர் உள்பட பலர் ஆற்றில் தொழிலாளர்கள் உயிர் நீத்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதிய தமிழகம் சார்பில் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலையை அடைந்தது. பின்னர் அங்கிருந்த கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.