பெங்களூர் வள்ளுவர் சிலை நிறுவும் பணி துவக்கம்
பெங்களூர்: பெங்களூர் அல்சூர் ஏரிக்கரை அருகே வெண்கலத்தால் ஆன திருவள்ளுவர் சிலையை நிறுவும் பணி துவங்கியுள்ளது.
முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகியோர் பங்கேற்க இந்த சிலை திறப்பு விழா ஆகஸ்ட் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பெங்களூர் தமிழ்ச் சங்கம் முடிவு செய்து வருகிறது.
இது குறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் தாமோதரன் ஆகியோர் கூறுகையில்,
தமிழ்ச் சங்கம் அருகே நீலகண்டன் சர்க்கிளில் 18 ஆண்டுகாலமாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவரின் சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு மாநகராட்சி அனுமதி கிடைக்க வேண்டும். அந்த அனுமதி ஓரிரு நாளில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது நிறுவப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சுண்ணாம்புக் கல்லால் ஆனது. இந்தச் சிலையை எடுத்துவிட்டு, ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டு தமிழ்ச் சங்கத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள வெண்கல சிலையை நிறுவும் பணி துவங்கும்.
முதல் கட்டமாக சிலை பீடத்தை சரி செய்யும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதைத் தொடர்ந்து புதிய சிலை பீடத்தில் நிறுவப்படும். சிலைத் திறப்பு விழாவை கர்நாடக அரசே நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும், தமிழ்ச் சங்க கிளைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். முதல் நாள் விழா நிகழ்ச்சி ஆர்.பி.என்.எம்.எஸ். மைதானத்தில் நடக்கும்.
இதைத் தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தில் 2 நாள்கள் நடத்தப்படும் விழாவில் இசை, நடன, நாட்டிய, பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்படும். விழாவையொட்டி அல்சூர் பகுதி முழுவதும் அலங்கரிக்கப்படும் என்றனர்.
இதற்கிடையே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்று கர்நாடக கன்னடம் மற்றும் கலாசாரத் துறை இயக்குனர் மனுபளிகார் கூறியுள்ளார்.
சென்னையில் நிறுவப்படவிருக்கும் சர்வக்ஞர் சிலை, கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள கன்னட பவனில் வைக்கப்பட்டிருந்தது. இச்சிலை சென்னைக்கு அனுப்ப்பட்டுவிட்டது.
இச்சிலை சென்னை அயனாவரத்தில் உள்ள பூங்காவில் நிறுவப்பட்டு ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடக முதல்வர் எதியூரப்பாவால் திறந்து வைப்படும் என்றார் அவர்.