காந்திகிராமம் லட்சுமி சேவா சங்கத்திற்கு தேசிய விருது
திண்டுக்கல்: தென்னிந்திய அளவில் சிறந்த திட்ட செயலாக்க முகமைக்கான தேசிய விருதை திண்டுக்கல் காந்திகிராமம் லட்சுமி சேவா சங்கம் பெற்றுள்ளது.
பாரம்பரிய தொழில்களை புனரமைக்கும் ( ஸ்பூர்த்தி ) திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் சித்தா, ஆயுர்வேத மருந்து தயாரிப்பை புனரமைப்பதற்கான திட்ட செயலாக்க முகமையாக, காந்திகிராமம் லட்சுமி சேவா சங்கம் செயல்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நிலக்கோட்டை, கொடைக்கானல் தாலுகாக்களிலும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத முறையை முழுமையாக புனரமைக்கும் வகையில், பல்வேறு நிலைகளில் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக இந்த சங்கம் தென்னிந்திய அளவில் சிறந்த திட்ட செயலாக்க முகமைக்கான தேசிய விருதுக்கு தகுதி பெற்றது.
புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தினேஷ் படேல், காந்திகிராம அறக்கட்டளை செயலாளர் ராஜகோபாலனிடம் விருது வழங்கி கவுரவித்தார்.