தபேலா வாசித்து அசத்திய முஷாரப்
லண்டன்: லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தடாலடியாக மேடையில் ஏறி தபேலா வாசித்து அனைவரையும் அசத்தினார்.
முஷாரப்புக்கு தற்போது பாகிஸ்தானில் நேரம் சரியில்லை. அவருக்கு எதிராக சமீபத்தில் அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை அளித்தது. இதை எதிர்பார்த்துதானோ, என்னவோ ஏற்கனவே அவர் குடும்பத்துடன் லண்டனுக்குப் போய் விட்டார்.
இப்போதைக்கு அவர் பாகிஸ்தான் திரும்ப மாட்டார் எனத் தெரிகிறது. லண்டனில் ஹாயாக பொழுதைப் போக்கி வருகிறார் முஷாரப்.
அங்கு ஒரு இசை நிகழ்ச்சிக்கு முஷாரப்பை அழைத்திருந்தனர். அவரும் போயிருந்தார். இசை நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தபேலா வாசித்தவர் சரியாக வாசிக்கவில்லை. இதனால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அப்போது தடாலடியாக மேடையில் ஏறினார் முஷாரப். தபேலா கலைஞரிடம் சென்று கொஞ்சம் தள்ளி உட்காருங்கள் என்று கூறி அவரிடமிருந்த தபேலாவை வாங்கி வாசிக்கத் தொடங்கினார்.
தொழில்முறை வித்வான் போல முஷாரப் தபேலா வாசித்ததைப் பார்த்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அசந்து போய் விட்டனராம்.
வெளியில் அவரை பலர் இம்சையாக பார்த்தாலும், அவருக்குள் இருந்த இசையைப் பார்த்து வந்த ஆச்சரியம் அது.