For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிவுப்படையை உருவாக்கும் ஆசிரியர்கள் - கருணாநிதி புகழாரம்

By Staff
Google Oneindia Tamil News

Dr Radhakrishnan
சென்னை: ஆசிரியர்கள் அறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்டு பணியாற்றுபவர்கள் என்று முதல்வர் கருணாநிதி ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று. இந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்தன்று டெல்லி மற்றும் மாநிலத் தலைநகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

முதல்வர் கருணாநிதி ஆசிரியர் தினத்தையொட்டி வாழ்ழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் திங்கள் 5-ம் நாள், ஆசிரியர் தினம்! இந்தியத் திருநாடு முழுமையிலும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரிய பெருமக்களின் பெருமைகளைப் போற்றிப் புகழும் திருநாள்!

பல்கலைக்கழகங்களோடு தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம்தான் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர்தொடராய் எழுந்திட முடியும்.

அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பை கடமையாக கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரிய பெருமக்கள்! இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை அவனிக்கு புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம்'' மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியராகப் பணி தொடங்கி, இந்த நாட்டின் மிக உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை அணிசெய்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த பொன்னாளே இந்த ஆசிரியர் தினம்! இந்நன்னாளில் சீரிய சிந்தனைகளோடு, கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இந்நன்னாளில் மத்திய அரசின் விருதினையும், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினையும் பெற்று மகிழும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள் உரித்தாகுக என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்த்து

இதேபோல அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தி:

ஆசிரியராக பணியைத் தொடங்கி பின்னர் குடியரசுத் தலைவராக விளங்கிய தத்துவமேதை முனைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

செல்வங்களுள் மிகச்சிறந்தது கல்விச்செல்வம். வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது, கள்வரால் கவர முடியாது, இப்படிப்பட்ட அழியாத செல்வமான கல்வியை போதிப்பவர்கள் ஆசிரியர்கள்.

தன்னலமற்ற சமூகச்சேவை ஆற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்கள் ஆசிரியர்கள். மனிதனை, மனிதனாக உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த நன்னாளில் ஆசிரியர் சமூகம் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மென்மேலும் வளர வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்து எனது அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக் களை தெதிரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X