மாவட்ட நூலகத்தில் உட்கார இடமில்லை-வாசகர்கள் அவதி
விருதுநகர்: விருதுகர் மாவட்ட மைய நூலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுவதால் நூல்கள் படிக்க வரும் வாசகர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட மைய நூலகம் விருதுநகர் புல்லக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ளது. மாவட்ட மைய நூலகங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.
விருதுநகர் மாவட்ட மைய நூலகம் 2 தளங்களில் உள்ளது. முதல் தளத்தில் பத்திரிக்கைபகுதி, குறிப்புதவி பகுதிகள் உள்ளன. 2வது தளத்தில் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகமும் செயல்பட்டுவருகிறது.
புதிய புத்தகங்களின் வரவையொட்டி பத்திரிக்கை படிக்கும் பகுதி அறையை திறக்காமல் வாசகர்கள் அனைவரும் தரைத் தளத்தில் உள்ள சிறிய இடத்தில் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்றபடியும், நெருக்கியடித்தபடியும் படிக்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பத்திரிக்கைப் பகுதியை முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாசகர்களுக்கு விசாலமாக அமர்ந்து, நிம்மதியாக படிக்க வாய்ப்பு ஏற்படும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.