திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தங்க மயில்
திருச்செந்தூர்: நாகர்கோவிலைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தங்க மயிலை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
நாகர்கோவில் சோழராஜ கோயில் தெருவை சேர்ந்த வைகாசி விசாக பாதயாத்திரை பக்தர்கள் குழுவில் 350 பேர் உள்ளனர்.
இவர்கள் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழாவிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த பக்தர்கள் குழுவினர் கோயிலுக்கு உபயமாக தங்க மயில் வழங்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து 300 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, செம்பு தகடு, தேக்கு மரம் ஆகியவற்றின் மூலம் தங்க மயில் வாகனத்தை உருவாக்கினர். இதற்கு ரூ.5 லட்சம் செலவானது. இதன்படி தேக்குமரத்தில் செம்பு தகடு மீது வெள்ளியால் பூசப்பட்டது. அதன்மேல் தங்கமூலம் பூசப்பட்ட தங்க மயில் வாகனத்தை வேனில் திருச்செந்தூர் எடுத்து வந்தனர்.
பின்னர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தேவதாசசுந்தரம், அறங்காவலர்கள் படிக்காசு, வக்கீல் சந்திரசேகரன், திலகாவதி, தஙகதுரை, இணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் ஓப்படைத்தனர். கோயிலில் மாதந்தோறும் உத்திர நட்சத்திரம், இரு பிரதோஷ நாட்களில் தங்க மயில் வாகனத்தில் ஸ்ரீபெலி உட்பிரகாரத்தில் நடக்கிறது.