For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் கூடாது.. சுதந்திர தின உரையில் பிரதீபா பாட்டீல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: நலத் திட்டங்களில் ஊழல் நடைபெறும்போது மக்கள் கொந்தளித்து எழுகின்றனர். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும் என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறினார்.

சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி-வானொலியில் அவர் ஆற்றிய உரை:

மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தங்களது உரிமைகளை அவர்கள் நன்கு உணர்ந்து, கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார்கள். நகர்ப்புற, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான வசதிகளை முறைப்படி செய்து தர வேண்டியது அவசியம்.

அரசின் மக்கள் சேவைத் திட்டங்கள் விரைவாக நடைபெற நிர்வாக சீர்திருத்தம் அவசியமாகிறது. மக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகள் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.

சமூகத்தில் நலிவடைந்த, ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்க வேண்டும். பொறுப்புள்ள, ஆக்கபூர்வமான அரசால் தான் இதை செய்து தர முடியும்.

சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு என பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடைபெற்றால் அது நாட்டுக்கே தீங்கு இழைக்கக்கூடிய செயலாகும்.

நலத் திட்டங்களில் ஊழல் நடைபெறும்போது மக்கள் கொந்தளித்து எழுகின்றனர். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

இந்த ஆண்டு போதிய அளவில் பருவமழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீர் பிரச்சனையும் உருவாகியுள்ளது. இதை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

அதேபோல் பன்றி காய்ச்சலை ஒழிக்கவும், அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் இந்த முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும்.

தீவிரவாதத்தால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உலகில் அமைதியும் சமாதானமும் நிலவ அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.

மதசார்பின்மையை பின்பற்றி வரும் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்து நீடிக்கவும், நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் மத நல்லிணக்கம் நிலவ வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

எல்லா துறைகளிலும் தமக்கு உள்ள கடமை, பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் குடிமக்களே நாட்டின் மகத்தான சொத்து.

பொருளாதார தேக்க நிலையால் உலக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நேரத்திலும் இந்தியா மிகத் திறமையாக சமாளித்து வருகிறது. நமது சந்தை மிகப் பெரியது. நமது பொருளாதாரம் மேம்பட நமது சந்தையே நமக்கு பலம்.

சமூகத்தில் நலிவுற்ற பிரிவினர் வளர்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளில் இணையாமல் இன்னும் ஒதுங்கியே உள்ளனர். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் என்றார் பிரதீபா பட்டீல்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X