பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியா கடுமையாக பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. மேலும், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்றில்லாமல், ஒருவரிடமிருந்து பலருக்கு என்ற வேகத்தில் அது பரவி வருவதாகவும் அது கூறியுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில்தான் பன்றிக் காய்ச்சல் வைரஸ் பலருக்கு தொற்றி வருவதாக தெரிகிறது.
விமான நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ள பரிசோதனை வசதிகள் போதிய அளவில் கை கொடுக்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. பரிசோதனை முறைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதையும் இது உணர்த்துவதாக உள்ளது.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் விரைவாகவும், உரிய முறையிலும் செயல்படாமல் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதி சலீம் ஹபாயப் கூறுகையில், இந்தியாவின் மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்திய மாநிலங்களில் உள்ள அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைள் போதுமானதாக இல்லை. இதுதான் கவலை அளிக்கிறது. மாநில அரசுகள் இன்னும் விழித்துக் கொள்ளாமல் உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
சில மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பரவலை எப்படித் தடுப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. சில மாநில அரசுகள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையும் காணப்படுகிறது என்றார்.
ஆனால் இதை மகாராஷ்டிர அரசின் முதன்மைச் செயலாளர் சர்வரி கோகலே மறுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் போதிய அளவில் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவை விட எந்த நாட்டில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்பதை உலக சுகாதார நிறுவனம் காட்டட்டும் என்று அவர் சவால் விட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications