பதிப்பாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவு
மதுரை: தமிழ்நாடு புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இந்த துறை சார்ந்த பணியாளர்களின் நலன் காத்திட தனி நல வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நல வாரியம் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்விச் செயலாளர், நிதித் துறைச் செயலர், நூலகத் துறை இயக்குனர், இணை பொது நூலக இயக்குனர் ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும், இதர எட்டு பேர், அலுவல் சாராத உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.
புத்தக பதிப்பாளர், விற்பனையாளர், இதன் துணைத் தொழிலான நூல் கட்டுமானம், டிடிபி ஆபரேட்டர்கள், லேமினேஷன் செய்பவர்கள், நோட்டு, புத்தகங்களை பேக் செய்யும் தொழில் செய்பவர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.
அச்சக தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தனி நல வாரியம் இருப்பதால், அவர்கள் இந்த நல வாரியத்தில் இடம் பெற மாட்டார்கள்.
வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications