ஜின்னாவைப் புகழ்ந்த ஜஸ்வந்த் சிங்கைப் பாராட்டி கவ்வாலி பாட்டு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னாவைப் பாராட்டியும், காந்தி, படேல், நேரு ஆகியோர்தான் பிரிவினைக்குக் காரணம் என்று விமர்சித்தும் நூல் எழுதிய ஜஸ்வந்த் சிங்கைப் பாராட்டி பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் ஒருவர் கவ்வாலிப் பாடலை எழுதியுள்ளார். அந்தப் பாடல் பாகிஸ்தானில் படு வேகமாக பிரபலமாகி வருகிறது.
பாங்கே மியான் என்ற அந்தப் பாடகர் எழுதிய கவ்வாலி பாடல் பாகிஸ்தான் டிவி சேனல் ஒன்றில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த கவ்வாலிப் பாடலை ஜஸ்வந்த்துக்கு சமர்ப்பிப்பதாகவும், ஜின்னாவை உயர்த்தி எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங்குக்கு 21 குண்டுகள் முழங்க சல்யூட் செய்வதாகவும் தனது பாடலில் கூறியுள்ளார் மியான்.
ஜின்னா குறித்த தனது நூலை பாகிஸ்தானிலும் வெளியிடவுள்ளார் ஜஸ்வந்த் சிங். ரம்ஜான் முடிந்த பின்னர் இதற்காக அவர் பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜின்னா குறித்த நூல் மூலம் பாகிஸ்தான் மக்களிடையே ஜஸ்வ்நத் சிங்குக்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டுளளது என்பது குறிப்பிடத்தக்கது.