முட்டுக்காடு அருகே பாய்மரப் படகு விளையாட்டு அறிமுகம்
முட்டுக்காட்டில் ஏற்கனவே படகு இல்லம் உள்ளது. இந்த நிலையில் அங்கு பாய்மரப் படகு விளையாட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தனியார் மற்றும் தமிழரசு இணைந்து இந்த பாய்மரப் படகு விளையாட்டை மேற்கொள்ளவுள்ளன.
ஏற்கனவே ஏலகிரியில் பாரா கிளைடிங் மற்றும் முதலியார்குப்பத்தில் பாரா செய்லிங் ஆகியவற்றை தனியாருடன் இணைந்து தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், முட்டுக்காடு ஏரியின் கழிமுகப் பகுதியில், பாய்மரப் படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். மேலும், பக்கிங்காம் கால்வாயின் கடலோரப் பகுதியிலும் இது மேற்கொள்ளப்படும்.
முட்டுக்காடு மிகச் சிறந்த சுற்றுலாத் தலம். இங்கு வார இறுதி நாட்களில் 4000க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். எனவே பாய்மரப் படகுகளை இங்கு அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார்.