சுற்றுலா பயணிகள்-3வது இடத்தில் தமிழ்நாடு
கடந்த 2008ம் ஆண்டுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்த தகவலை மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
உள்நாட்டு சுற்றுலாவில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு திருப்பதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவில் தான் காரணம். இந்த ஆண்டு சுற்றுலாவுக்காக ஆந்திரா வந்த வெளிமாநில மக்களின் எண்ணிக்கை மட்டும் 13 கோடியை 26 லட்சமாகும். கடந்த ஆண்டு 12.7 கோடியாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 14 சதவீதம் அதிகம்.
இரண்டாவது இடத்தை உத்தரப் பிரதேசம் பிடித்துள்ளது. இங்கு 2006ல் 11.6 கோடி பேர் வந்திருந்தனர். ஆனால், அது 2007ல் 10.55 கோடியாக குறைந்தது. தற்போது 2008ல் மீண்டும் உயர்ந்து 12.48 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இங்கு சுமார் 9.8 கோடி பேர் சுற்றுலா வந்தனர். இதை தவிர ராஜஸ்தான் 2.8 கோடி, மத்திய பிரதேசம் 2.2 கோடி, மகாராஷ்டிரா 2 கோடி, உத்தர்கண்ட் 2 கோடி, மேற்கு வங்கம் 1.9 கோடி, குஜராத் 1.5 கோடி மற்றும் கர்நாடகம் 1.2 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
மொத்த உள்நாட்டு சுற்றுலாவில் முதல் 10 மாநிலங்கள் சுமார் 88 சதவீதத்தை பெற்றுள்ளன.
கடந்த 2008ல் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 53 லட்சத்து 66 ஆயிரம். இது அதற்கு முந்தைய ஆண்டு 50 லட்சத்து 81 ஆயிரமாக இருந்தது.
வெளிநாட்டு பயணிகள் அதிகம் விரும்பும் இந்திய பகுதி என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது. இங்கு இந்த ஆண்டு சுமார் 23 லட்சம் வெளிநாட்டு பயணிகள் நமது தலைநகரை சுற்றி பார்த்துள்ளனர். இது 2006ல் 19 லட்சம், 2007ல் 20.1 லட்சமாகவும் இருந்தது.
மகராஷ்டிராவுக்கு 20 லட்சத்துக்கு அதிகமானவர்கள் வந்துள்ளனர். தமிழகத்தை 20 லட்சம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். இது 2007ம் ஆண்டை விட சுமார் 3 லட்சம் அதிகமாகும். வெளிநாட்டு சுற்றுலாவில் முதல் 10 இடத்தில் இருக்கும் மாநிலங்கள் 90 சதவீத பங்கை பெற்றுவிடுகின்றன.