இரட்டை குழந்தை முறையே சரி-எதியூரப்பா!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவும் நோக்கத்தில் இரட்டை குழந்தை முறை அறிமுகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல ஆண்டுகளாக ஒற்றை குழந்தை திட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இதன்படி ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை தான். இரண்டு குழந்தைகளை கொண்ட குடும்பம் அரசின் எந்த உதவியை நாட முடியாது.
இந்நிலையில் சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிவந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால் வியந்து போயுள்ளார்.
சீனா தற்போது பயன்படுத்தி வரும் ஒற்றை குழந்தை முறையை கர்நாடகாவில் பின்பற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் இரட்டை குழந்தை முறையையாவது பின்பற்ற ஆர்வத்துடன் இருக்கிறார்.
இது குறித்து நேற்று அவர் சட்டசபையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேசினார். அப்போது,
இரட்டை குழந்தை முறை மாநிலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பெரிதும் வழிவகுக்கும். இது தொடர்பாக சட்டசபையில் விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு பட்ஜெட் முன்னால் கூட அமுல்படுத்தப்படலாம். சீனாவின் இந்த திட்டம் வளர்ச்சிக்கான தந்திரம். இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நல்ல பலன் பெறுவர்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் இருக்கும் கிராம மக்கள் நல்ல ஆரோக்யத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். எனது சீன பயணத்தை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் எனக்கு ஞானோதயம் கிடைத்ததா என கேட்டால். ஆமாம் என்று தான் செல்வேன் என்றார்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தினருக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்காது.