சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு பூட்டு-ஊட்டி மலை ரயிலுக்கு சிக்கல்
இந்தியாவின் பழமையான மலை ரயில்களில் ஊட்டி ரயிலும் ஒன்றும். ஆங்கிலேயர் காலத்தில் 1845ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பணிகள் நிறைவடைந்து 1889ல் முதல் முறையாக இப்பகுதியில் ரயில் ஓடும் சத்தம் கேட்டது.
இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு இந்த ரயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த ரயில் குறித்து ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக ஏராளமான பயணிகள், ரயில் மூலம் ஊட்டி செல்ல விரும்புகின்றனர். இதனால் இந்த ரயிலுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த ரயிலின் நிலைமை தொடர்ந்து மோசமானதாக இருக்கிறது. பல சமயங்களில் பாதி வழிகளிலே நின்று விடுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். நடுக்காட்டில் திக்கு தெரியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த ரயிலின் மோசமான நிலைக்கு வாழ்நாள் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட என்ஜின்களை பயன்படுத்துவது தான் காரணம் என கூறப்பட்டது.
இதையடுத்து ரயில்வே அமைச்சகம் நிலக்கரி மூலம் இயங்கும் என்ஜினை தயாரிக்கும் நிறுவனம் எங்கு இருக்கிறது என உலகம் முழுவதும் தேடியது. அப்போது சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனம் மட்டும் தான் இதை தயாரிப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நான்கு புதிய என்ஜின் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதனால் மழை ரயில் விரைவில் புது பொலிவுடன் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அந்த சுவிட்சர்லாந்து நிறுவனம் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுவிட்டு, ஊட்டி மலை ரயில் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து மழை ரயிலுக்கு புதிய என்ஜின் வாங்கும் எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது.
இந்த மலை ரயிலை தொடர்ந்து நிலக்கரி மூலம் இயக்கினால் ஆண்டுக்கு ரூ. 24 கோடி வரை ரயில்வேக்கு நஷ்டம் ஏற்படும். இதற்கு பதிலாக டீசல் அல்லது இந்த பகுதியை மின்சார மயமாக்குவது சிறந்தது என ரயில்வே துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
டீசல் என்ஜின் கிடைக்குமா...
இதையடுத்து லக்னோவில் இருக்கும் ரிசர்ச் அண்ட் டிசைன்ஸ் ஸ்டாண்டர்டு அமைப்பு என்ற மத்திய அரசு நிறுவனம் மூலம் ஊட்டி மலை ரயிலுக்கு டீசல் என்ஜின் தயாரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி முழுமையடைந்தால் ரயில் டீசல் என்ஜின் மூலம் பயணிகளை மகிழ்ச்சியுடன் சுமந்து செல்லும்.
இந் நிலையில் ஊட்டி மலை ரயில் பாதையை சீரமைக்க ரயில்வே துறை ரூ. 11 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த தொகையின் மூலம் கல்லாறு முதல் குன்னூர் வரை உள்ள தண்டவாளங்கள் ரூ. 5 கோடி செலவில் மாற்றப்பட இருக்கின்றன.