சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறு கோவிலில் ஏசி வசதி
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி திருநள்ளாறில் உள்ள சனி பகவான் கோவிலில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. கூடுதலாக குளிர்சாதன வசதியும் முதல் முறையாக செய்யப்படுகிறது.
திருநள்ளாறில் உள்ள ஸ்ரீசனீஸ்வரபகவான் ஸ்தலமான ஸ்ரீதர்பாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தில் வருகிற 26ம் தேதி சனிபெயர்ச்சி விழா நடக்கிறது.
விழாவை முன்னிட்டு திருநள்ளாறுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
சனிப்பெயர்ச்சி விழா அன்று நாடு முழுவதிலிருந்தும் திருநள்ளாறுக்கு வருகை தரும் பக்தர்கள் பகவானை தரிசனம் செய்வதற்காக தர்ம தரிசனம், ரூ.50 சிறப்பு தரிசனம், ரூ.250 சிறப்பு தரிசனம் என்று மூன்று விதமான கிi வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் பகவானை தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி தரிசன பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நல்ல பகல் வேளையில் அதாவது பிற்பகல் 3.27 மணிக்கு நடைபெறுவதால் பக்தர்களை வெயிலின் கொடுமையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அனைத்து கியூ வரிசைகளின் மேல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நளதீர்த்த குளத்தின் கிழக்கு கரையில் நளன் கலிதீர்த்த விநாயகர்ஆலயம் உள்ளது. நளதீர்த்த குளத்திற்கு புனித நீராட வரும் பக்தர்கள், இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரை தரிசித்து விட்டு அருகில் உள்ள இடத்தில் தேங்காய் உடைப்பார்கள்.
சனிப்பெயர்ச்சி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தேங்காய் உடைக்கும்போது அவற்றை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில், பக்தர்களால் உடைக்கப்பட்ட தேங்காய்கள் மலை போன்று குவிந்து கிடக்கும். இதனால் மற்ற பக்தர்கள் ரோட்டிலேயே தேங்காயை உடைப்பதால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பெரிதும் இடைiறாக இருக்கும்.
எனவே, தற்பொழுது விநாயகர் ஆலயத்தின் அருகில் தேங்காய் உடைப்பதற்காக பிரத்யேகமாக தனி இடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீசனீஸ்வரபகவான் ஆலயத்தில் ஏற்கனவே, ஸ்ரீசனீஸ்வரபகவான் சன்னதியில் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள பிரணாம்பிகை அம்பாள் சன்னதியிலும், உள்ளே ஸ்ரீதர்பாரண்யேஸ்வரசுவாமி சன்னதியிலும் புதிதாக குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.