தலித் முன்னேற்றத்துக்காக தமிழகத்தில் மாடல் கிராமம்-மத்திய அரசு
டெஹ்ராடூன்: இந்தியாவில் தலித் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் நோக்கத்தில் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் மாடல் கிராமங்களை அமைக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆலோசகராக இருக்கும் டாக்டர் வினிதா ஷர்மா தலைமையில் செயல்பட இருக்கிறது.
இத் திட்டம் வட இந்தியாவில் ஜம்மு & காஷ்மிர், ஹிமாச்சல பிரதேசம், உத்தர்கண்ட், மேற்கு இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் தென் இந்தியாவில் தமிழ் நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இத் திட்டத்தில் டெஹ்ராடூனில் இருந்து இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற என்ஜிஓ அமைப்பு இணைந்து செயல்படவுள்ளது.
இது குறித்து ஹெஸ்கோ தலைவர் அனில் ஜோஷி கூறுகையில்,
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சிறு குடிசை தொழிற்சாலைகள் ஆகியவற்றை கொண்ட மாடல் கிராமங்களை உருவாக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களில் அடிப்படை வசதிகளை அதிகரித்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.
நாட்டில் சாதி பிரச்சனை இன்னும் இருக்கத்தான செய்கிறது. இதனால் தலித் மக்கள் ஊரைவிட்டு தனித்தும் அல்லது ஊர் எல்லையிலும் வசித்து வருகின்றனர்.
இதற்காக மிகவும் பாதிக்கப்பட்ட, அடிப்படை வசதிகள் முற்றிலும் கிடைக்க பெறாத தலித் மக்கள் இருக்கும் கிரமாங்களை அடையாளம் கண்டு வருகிறோம்.
தலித் மக்களின் திறமைகளை அதிகரித்து அவர்களை பொருளாதார ரீதியாக சுதந்திரம பெற செய்ய முயற்சிக்கிறோம். அவர்களுக்கு தச்சு, இரும்பு அடித்தல், வீடு கட்டுதல் போன்ற தொழில்களை ஸ்ரீதன் திட்டம் மூலம் செய்து வருகிறோம்.
ஸ்ரீதன் திட்டம் மூலம் பயன்பெறுபவர்கள் தங்களுக்கு கிடைத்த உதவிகளை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றார்.