வஉசி மணிமண்டப மேம்பாட்டு பணிக்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு
திருநெல்வேலி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டப மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 54 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாக திருநெல்வேலி மேயர் ஏஎல் சுப்பிரமணியம் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றுலா துறை மூலம் வஉசி மணிமண்டபத்தை சுற்றிலும் ரூ. 10 லட்சம் செலவில் சுற்று சுவர் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும், ரூ. 30 லட்சம் மதிப்பில் பார்க்கிங் வசதியும், ரூ. 6.5 லட்சம் செலவில் தோரணவாயிலும் அமைக்கப்படுகிறது. மேலும் பல லட்சம் மதிப்பில் மின்விளக்குகள் நிறுவமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வஉசி மணிமண்டப மேம்பாட்டு பணிக்காக மொத்தம் ரூ. 54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டென்டர் திருநெல்வேலியில் இன்று நடக்கிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் பகுதி 2 என்ற திட்டத்தின் கீழ் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற ரூ. 50 லட்சத்தை மாநில அரசு ஓதுக்கியுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் துவக்கப்படும் என்றார் அவர்.