கருத்தடை சாதனங்கள் பற்றாக்குறை - திணறும் வங்கதேசம்
தாகா: ஜன நெருக்கடி மிகுந்த வங்கதேசம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஆணுறை உட்பட போதிய கருத்தடை சாதனங்கள் இல்லாமல் திணறி வருகிறது.
தமிழகத்தை விட சற்றே அதிக பரப்பளவு கொண்ட குட்டி நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வரிசையில் 7வது இடத்தில் இருக்கிறது.
கடந்த 2007ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள்தொகை 1.7 சதவீதம் அதிகரித்து 16.13 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 2006ல் 2,090 அமெரிக்க டாலராக இருந்த தனி நபர் வருமானம், 1,230 அமெரிக்க டாலராக குறைந்துவிட்டது.
இதேநிலை நீடித்தால் இந்த குட்டி நாட்டில் வரும் 2050ம் ஆண்டு வாக்கில் சுமார் 25 கோடி மக்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்நாடு குடும்ப கட்டுபாடு முறைகள் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதில் தற்போது ஓரளவு முன்னேற்றம் கிடைத்து வருகிறது. வங்கதேச மக்கள் தொகை மற்றும் சுகாதார சர்வே ஒன்றில், அந்நாட்டு மக்களிடம் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தும் விகிதம் சுமார் 55.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 76 லட்சம் ஆணுறைகளும், 86 லட்சம் கருத்தடை மாத்திரைகளும், 12 லட்சம் கருத்தடை ஊசிகளும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறது.
இந்நிலையில் மக்கள் தொகை பிரச்சனையை சமாளிப்பதில் தற்போது வங்கதேசத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் தயாரிப்பதில் ஏற்பட்டு்ள்ள தட்டுப்பாடு தான்.
தற்போது அரசு கையிருப்பில் இருக்கும் கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் போன்றவை இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தீர்ந்துவிடுமாம். அதன் பின்னர் என்ன செய்வது என தெரியாமல் முழித்து வருகிறது.
ஆனால், வங்கதேசம் போன்ற மக்கள்தொகை நெருக்கடியால் திணறும் நாடுகள் குறைந்தபட்சம் 12 மாத சேமிப்பாவது வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இந்த ஆணுறை பற்றாக்குறை காரணமாக வங்கதேசத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 800 பெண்கள் எதிர்பாராமல் கருத்தரித்துள்ளனர். இதில் பலர் கருச்சிதைவு செய்து கொண்டனர். ஆனால், 47 ஆயிரம் பேர் குழந்தை பெற்று கொண்டனர்.
பற்றாக்குறை ஏற்படாமல் இருந்திருந்தல் இந்த 47 ஆயிரம் குழந்தைகள் பிறப்பதை தடுத்திருக்க முடியும் என வங்கதேச மனித வளர்ச்சி ஆராய்ச்சி அமைப்பு ஒன்று கூறுகிறது.
இது குறித்து வங்கதேசத்தில் கருத்தடை சாதனங்களை வழங்குவதை கண்காணிக்கும் குழுவின் தலைவராக இருக்கும் கெய்சர் ரஷித் கூறுகையில்,
இம்மாத இறுதியில் கருத்தடை சாதனங்கள் இறக்குமதியாகி விடும் என நினைக்கிறோம். ஒரு வேளை இதில் தாமதம் நடந்ததால் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்றார்.












Click it and Unblock the Notifications