காமராஜர் பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம்-80 வயது தியாகி கைது!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்த 80 வயது தியாகியை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13.10.09 அன்று திறந்து வைக்கவிருக்கிறார். இந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்கள் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ராதாபுரத்தை அடுத்துள்ள குமிளம்பாடு கிராமத்தில் தியாகி சுடலைமுத்து(80) என்பவர் கடந்த 2ம் தேதி முதல் இந்த காரணத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
நேற்று 4வது நாளாக அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதனால் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீஸார், கைது செய்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாக சுடலைமுத்து அறிவித்துள்ளார். இதனால் ராதாபுரம் பேருந்து நிலைய விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications