இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்: சீமான்
சென்னை: சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை பெரும் ஆர்ப்பட்டம் நடக்கும் என்று இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது வாய்க் கொழுப்பெடுத்துப் பேசியுள்ளார்.
இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை என்று திமிருடன் கூறியுள்ளார்.
இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும். கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்நாட்டிலேயே திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு உணவு, உடை, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவர்களை நித்தமும் சிறுகச்சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட யாரையும் அனுமதிக்கவில்லை.
இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிச அரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளார். மேலும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசித் திரிகிறார்.
ஆகவே, சிங்கள துணைத் தூதரைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சிங்கள தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள தூதரகம் முன்பு இப்போராட்டம் நடைபெறும்.
தமிழர்கள் அனைவரும் முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வாய்க் கொழுப்பில் திரியும் சிங்கள துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். இப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications