திருப்பதி கோவிலில் தரிசன கட்டண உயர்வு?-19ல் ஆலோசனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன கட்டணங்களை உயர்த்துவது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் வரும் 19ம் தேதி ஆலோசனை செய்யவிருக்கிறது.
உலக பிரசித்த பெற்ற இந்து திருத்தலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு வாரமும் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிகின்றனர்.
தினமும் 18 மணி நேர சர்வ தரிசனமும், சிறப்பு தரிசனமும் அளிக்கப்படுகிறது.
மேலும், சுப்ரபாத தரிசனம், தோமாலா சேவை, அர்ச்சனானந்த்ரா தரிசனம், கல்யாண உற்சவம், பிரமோற்சவம், தோலோத்சவம், வசந்தோத்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவா, ஏகாந்த சேவா ஆகிய சேவைகளும் விழா காலத்தில் நடக்கின்றன.
இந்நிலையில் தற்போது திருப்பதி திருமலை தேவஸ்தானம் இந்த சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக வரும் 19ம் தேதி கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
தரிசன கட்டணங்கள் உயரும் பட்சத்தில் திருப்பதி புனித சுற்றுலா நடத்தி வரும் தமிழக சுற்றுலாத்துறை, இந்திய சுற்றுலாத்துறை, ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஆகியவையும் தங்களது பேக்கேஜ் கட்டணங்களை அதிகரிக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications