219வது நினைவு நாள் - கட்டபொம்மன் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி
கோவில்பட்டி: கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் 219வது ஆண்டு நினைவு நாள் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
கயத்தார் கட்டபொம்மன் நினைவிடத்தில் நடந்த விழாவிற்கு விருதுநகர் எம்எல்ஏ வரதராஜன் தலைமை வகித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர் வீமராஜா, அறக்கட்டளை முன்னாள் பொருளாளர் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் குட்டி வரவேற்றார்.
விழாவில் கலந்து கொண்டு மதிமுக பொது செயலாளர் வைகோ பேசுகையில்,
இந்த விழாவில் வீர இளைஞர்கள் அதிகம் கலந்து கொண்டுள்ளனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு மாண்ட கட்டபொம்மனின் வீரத்தை மறவாமல் கலந்து கொண்டுள்ள இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த விழா நடக்கும் போதெல்லாம் மழை சூழ்ந்து கொள்ளும். ஆனால் இந்தாண்டு இவ்விழா நடக்க இயற்கையும் ஓத்துக் கொண்டுள்ளது. கடந்தாண்டு நடந்த விழாவில் திருமங்கலம் எம்எல்ஏ வீரஇளவரசன் கலந்து கொண்டார். ஆனால் இந்தாண்டு அவர் இல்லை.
மதிமுக இயக்கத்திற்கு பாடுபட்டவர் வீரஇளவரசன். அவரது மரணம் இயக்கதிற்கு பேரழிப்பாகும். மரணத்தை வென்ற மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு புகழஞ்சலி நடத்துகிறோம்.
வெள்ளையர்களின் படையை கண்டு கட்டபொம்மன் அஞ்சவில்லை. அதேபோல மாவீரன் பிரபாகரனும் இலங்கை படையை கண்டு அஞ்சவில்லை. விடுதலை புலிகள் மண்ணின் உரிமையை காக்க போராடி வருகின்றனர். பாஞ்சாலங்குறிச்சியில் பரங்கியர்கள் தாய்மார்களிடம், பெண்களிடம் தவறாக நடக்கவில்லை. ஆனால் இலங்கையில் நடப்பது என்ன, தமிழ் பெண்ணை சிங்கள சிப்பாய்கள் கொடுமை படுத்துகின்றனர். அரசியலுக்கு அப்பற்பட்டு இந்த விழா நடத்தப்படுகிறது.
நாட்டிற்காக உயிரை மாய்த்த வீரதமிழர்களின் வீரத்தை இன்றைய இளைஞர்களின் மனதில் பதிவு செய்யத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. அண்ணா வழியில் போராடுகிற இயக்கம் மதிமுக என்றார் அவர்.