தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் 80வது பிறந்த நாள் விழா
சென்னை: ஆன்மீகப் பெரியவர் ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
தனது ஆன்மீக குருக்களில் ஒருவரான ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்று ஆசிபெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆன்மீகத்துடன் பல்வேறு சமுதாயப் பணிகளை நிறைவேற்றி வருபவர், சுவாமி சின்மயானந்தரின் சீடர் ஸ்ரீதயானந்த சுவாமிகள்.
இவரது 80வது பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
தர்ம ரக்ஷனா சமிதி சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தொழிலதிபர் பொள்ளாச்சி என்.மகாலிங்கம் தலைமை தாங்கிப் பேசினார். சுவாமிகளின் சேவை மற்றும் பகவத் கீதை சொற்பொழிவுகள் குறித்து அவர் புகழந்தார்.
விழாவில் நடிகர் ரஜினி, அவரது மனைவி, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தொழிலதிபர்கள் வேணு சீனிவாசன், கருமுத்து டி.கண்ணன், முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் ஆகியோர் ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசிபெற்று, வாழ்த்திப் பேசினர்.
விழா நிறைவில் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் பேசும்போது, எல்லா கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால், நம் இந்து கலாசாரத்தை பாதுகாத்தே ஆக வேண்டும். நம்மில் பல்வேறு அமைப்புகள், மத தலைவர்கள் உள்ளனர். அவரவர் தங்கள் மக்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டு தங்களுக்குள் புரிதலை, தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, தர்ம ரக்ஷனா சமிதியின் துணைத் தலைவரும் பரதநாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் வரவேற்றார்.