பல்லவர் கால தமிழ், சமஸ்கிருத கல்வெட்டு கண்டுபிடிப்பு
வேலூர்: வேலூர் அருகே பல்லவர் காலத்து தமிழ் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் கோட்டை மியூசிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கமலநாதன் கூறுகையில், கல்வெட்டின் நீளம் நாலரை அடி, அகலம் 2.5 அடியாகும். முன்பக்கம் 8 வரி எழுத்துகளும், பின்பக்கம் ஏழு வரிகளும் காணப்படுகின்றன. தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இவை உள்ளன.
திப்பசமுத்திரம் என்ற இடத்தில் 2 நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் நடந்த பணியின்போது பள்ளம் தோண்டியபோது இந்த கல்வெட்டு கிடைத்தது.
பல்லவர் காலத்து கல்வெட்டு இது என்று தெரிகிறது. இதுவரை கிடைத்த பல்லவர் கால கல்வெட்டுகளிலேயே இதுதான் பழமையானதாக இருக்கும் எனவும் கருதுகிறோம் என்றார் அவர்.
4வது நூற்றாண்டு முதல் 9வது நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள், கிட்டத்தட்ட 500 ஆண்டுகள், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.