திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் 27ம் தேதி ராகு பெயர்ச்சி
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவிலில் 27ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதற்கான லட்சார்ச்சனை விழா தொடங்கியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் மட்டுமே ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என தனது இரு தேவியருடன் திருமணக்கோலத்தில் நிருதி மூலையில் தனி சந்நிதி கொண்டு மங்கள ராகுவாக எழுந்தருளி, உலக மக்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
இக்கோவிலில் வருகிற 27ம் தேதி காலை 9.04 மணிக்கு ராகு பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார்.
இதை முன்னிட்டு, சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், தயிர் பள்ளயம், அன்னதானம், லட்சார்ச்சனை, வீதியுலா ஆகியவை நடைபெற உள்ளன.
ஸ்ரீ ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான லட்சார்ச்சனை விழா புதன்கிழமை தொடங்கியது. அறங்காவலர் குழுத் தலைவர் செ. ராமலிங்கம் தொடக்கி வைத்தார்.
முதல் கட்ட லட்சார்ச்சனை இன்றுடன் முடிகிறது. கோயில் சிவாச்சாரியார் நாகராஜ குருக்கள் தலைமையில், உமாபதி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை பூஜையில் ஈடுபட்டனர்.
இரண்டாம் கட்டமாக லட்சார்ச்சனை வரும் அக். 29 -ம் தேதி தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும்.