ஜெர்மனியின் கோலென் நகரில் தமிழ் இணைய மாநாடு- 09
ஜெர்மனியின் கோலென் நகரில் அக்டோபர் 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.
2009 சிங்கப்பூரில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ இணைய மாநாட்டை போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கணிமை, தமிழ் இணையம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும், எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும் பற்றி உரையாடும் தொழில்நுட்பவியல் மாநாடாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய தமிழ் இணைய மாநாடுகள் இதற்கு முன்பு சென்னை (1999, 2003), சிங்கப்பூர் (200,2004), கோலாலம்பூர் (2001), சான் பிரான்சிஸ்கோ (2002) ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
மாநாடு நடக்கவிருக்கும் கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியவில் மற்றும் தமிழியல் மையத்தின் ஒத்துழைப்போடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
பேராசிரியர்.உள்ரிகே நிக்கிலசு அவர்களின் தலைமையில் இயங்கும் இம்மையம் ஐரோப்பாவில் தமிழ் ஆய்வுக்கான தலைசிறந்த மையங்களில் ஒன்றாகும். இவ்வாய்வு நிறுவனத்திலுள்ள தமிழாசிரியரும் ஆய்வாளருமான முனைவர். தாமசு மால்ட்டன், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியங்களை மின்வடிவேற்ற பெரும் முயற்சி செய்தவரும் தமிழார்வலர் குழுக்களில் பெரிதும் அறியப்பட்டவருமாவார்.
தமிழகத்துக்கு வெளியே 50,000 தமிழ் நூல்களுக்கு மேல் வைத்திருக்கும் ஒரே கல்வி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.