அந்தமானில் வள்ளுவர் சிலை-நெப்போலியன் திறக்கிறார்!
நாகர்கோவில்: அந்தமானில் புதிதாக நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை அமைச்சர் நெப்போலியன் திறந்து வைக்கிறார்.
சென்னை விஜிபி உலக தமிழ்ச் சங்கம், அந்தமான் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடியில் உருவாக்கப்பட்ட ஆறரை அடி உயரமுள்ள இந்த கற்சிலை, அந்தமான் துறைமுகப் பூங்காவில் நிறுவப்படவுள்ளது. மத்திய இணையமைச்சர் நெப்போலியன் வருகிற 7ம் தேதி சிலையை திறந்து வைக்கிறார்.
மயிலாடி சிற்பி நல்லதாணு உருவாக்கியுள்ள இந்த வள்ளுவர் சிலை, கடந்த மாதம் மயிலாடியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கப்பலில் அந்தமானுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
இம் மாதம் 6, 7, 8ம் தேதிகளில் அந்தமானில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும், திருக்குறள் குறித்த கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.
வி.ஜி.பி சந்தோஷம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட 100 தமிழ் அறிஞர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
'குமரியில் வள்ளுவ நாடும், வள்ளுவர் மலையும்' என்ற தலைப்பில் கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையப் பொதுச்செயலர் எஸ். பத்மநாபன் உரையாற்றுகிறார்.