கொலை வழக்கு: விவசாயியின் கருணை மனு ஏற்பாடு - வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்
டெல்லி: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஈரோடு விவசாயியின் கருணை மனுவை மத்திய அரசு ஏற்று அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றி, வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் வகையில் குறைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த நாகமலை கவுண்டர், அவரது மனைவி பொன்னுத்தாய், மகன்கள் பாலசுப்பிரமணியம், மூர்த்தி, மகள் செல்வி ஆகிய 5 பேர் கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டனர்.
சொத்து தகராறில் இவர்களை கொன்றதாக நாகமலை கவுண்டரின் மருமகன் கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர். இவர் விவசாயி ஆவார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1997ம் ஆண்டு கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, கோவிந்தசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார் கோவிந்தசாமி. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
அதில், கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்து, அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், இந்த மனுவை தூக்கி கிடப்பில் போட்டு விட்டார்.
தற்போது இந்த மனுவுக்கு ப.சிதம்பரம் உயிர் கொடுத்து, குடியரசுத் தலைவரின் பரிந்துரைப்படி, வாழ்நாள் முழுவதும் கோவிந்தசாமி சிறையில் கழிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கோவிந்தசாமியின் உயிர் தப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications