பளபளக்கும் மெரீனா பீச்: 20ம் தேதி திறப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள், மருத்துவ அலுவலர்கள், மருந்தாளுநர்களுக்கு பணி நியமனங்கள், தொழிற் பயிற்சி அலுவலர்கள், களப் பணியாளர்கள் (மலேரியா) 140 பேருக்கு பணி நிரந்தர ஆணைகளை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
இன்று விழாவில் 4 மருத்துவர்கள், 7 மருந்தாளுநர்கள், 107 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனங்களும், தொழிற்பயிற்சி முதல்வர் உட்பட 7 அலுவலர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் மற்றும் 15 மலேரியா களப் பணியாளர்களுக்கு ஆணைகள் என 140 நபர்களுக்கு பணி ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உரிமைகளை இழந்து, இழந்த உரிமைக்காக போராடியபோது அரசு ஊழியர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. மேலும், பணி நியமனத் தடை சட்டத்தினை கொண்டு வந்து ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு கிடைப்பதை அறவே தடுத்தது அதிமுக அரசு.
பணியில் இருக்கும்போது இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதையும் தடை செய்தார்கள்.
இதனால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் குடும்பங்கள் வறுமையில் தத்தளித்தன. பறிக்கப்பட்ட தங்களது கோரிக்கைகளை மீள வழங்க கோரி நியாயமான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
1996ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக நான் பொறுப்பேற்ற பொழுது ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற வேண்டும் என்பதாகும். அந்தப் பணியில் 85 சதவீதம் தொட்டுள்ளோம்.
100 சதவீதத்தையும் முழுமையாக முடிப்போம். அடையாறு பூங்காப் பணிகள் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு, நடைபெற்று வருகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய கடற்கரையாக விளங்கும் மெரீனா கடற்கரை அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெரீனா கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையில் மெரினா கடற்கரைப்பகுதியில் 14 அமர்வு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைப் பயிற்சி மேற்கொள்வதற்காக 4 மீட்டர் அகலமுள்ள நடை பாதைகள் பலவித வண்ணங்களில் சிமெண்ட் கற்களால் கண்ணை கவரும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் காமராஜர் சாலை கிழக்கில் பாதசாரிகளுக்காக 5 மீட்டர் அகலமுள்ள அழகிய கிரானைட் கருங்கல் பதிக்கப்பட்ட நடைப்பாதையும், ஓரங்களில் அழகிய கருங்கல் தூண்களில் இணைக்கப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டிலிலான கைப்பிடி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
அழகிய புல் தரைகள், 2 நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதலாக பேருந்துகள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான போதுமான நிறுத்தி மிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க பணிகளால் மெரினா கடற்கரை உலகின் முதன்மையான அழகிய கடற்கரையாக விளங்கும்.
ரூ.25 கோடியே 92 லட்சம் செலவில் மெரினா கடற்கரை அழகுப்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதை வரும் 20ம் தேதி முதல்வர் திறந்து வைப்பார் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications