மொரீஷியஸில் ஜூனில் உலகத் தமிழ் மாநாடு
மதுரை: மொரீஷியஸ் நாட்டில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற உள்ளதாக, அந்நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் அங்கிரி வீரையா செட்டியார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக, மொரீஷியஸிலும் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 10 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் நான் ஆற்றிய பணிகளுக்காக இந்திய அரசு எனக்கு "பிரவாசி பாரதிய சம்மான் விருது' வழங்கி கௌரவித்துள்ளது.
எங்கள் நாட்டில் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக உள்ளது. மேலும், பணத் தாள்களில் தமிழ் வாசகம் இடம் பெற்றுள்ளது. நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சென்னை -மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இந்திய மாணவர்களுக்கு உயர் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்களின் நலனுக்காக உலகத் தமிழ் ஒருங்கிணைப்பு மாநாடு, வரும் ஜூனில் 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications