தொடரும் சோகம்- சிவகிரி மலைப்பகுதியி்ல் பெண் யானை சாவு
புளியங்குடி நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெண் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனப்பகுதியில் 100க்கனக்கான யானைகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன.
மலைப்பகுதியில் கோடை காலத்தில் போதிய உணவு, குடிநீர் கிடைக்காத நிலையில் யானைகள் கேரள வனப்பகுதிக்கு சென்றன. கடந்த மாதம் பெய்த மழையை அடுத்து மீண்டும் தமிழக வனப்பகுதிகளுக்கு யானைகள் திரும்பின.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, கேரளாவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஓன்று உடல் நிலை சரியில்லாமல் சிவகிரி வனப்பகுதியில் உள்ள சுணைப் பாறை பீட் பகுதியில் சுற்றி திரிந்தது.
இந்த நிலையில், அங்குள்ள பேய்யனாறை ஒட்டி மரம் மீது சாய்ந்த நிலையில் அந்தப் பெண் யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து சிவகிரி வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்த யானையை புளியங்குடி சிந்தாமணி அரசு கால்நடை மருத்துவர் கோயில்ராஜா தலைமையிலான ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்தனர், பின்பு அதே இடத்திலேயே யானையை வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் புளியங்குடி, கோட்டைமலையாறு, தலையணை உள்ளிட்ட பகுதிகளில் 4 யானைகள் நோய்வயப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.