வள்ளுவர் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவல்
நாகர்கோவில்: குமரிக் கடலில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையின் 10வது ஆண்டு விழா நாளை (1ம் தேதி) காலை நடக்கிறது. இதையொட்டி சிலை மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி வரலாற்று ஆய்வு மையம், தமிழக சுற்றுலா துறை ஆகியவை இணைந்து குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் 10-வது ஆண்டு விழாவை நாளை (1ம் தேதி) குமரி முனையில் நடத்துகிறது.
காலை திருவள்ளுவர் திருவடிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் சிலையின் உச்சியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு கூட்டம் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி வரலாற்று பாண்பாட்டு ஆய்வு மைய தலைவர் வேலப்பன் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.