நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது - வெயில் கொளுத்தும்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூரில் ஏப்ரல் மாத துவக்கத்திலேயே வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு மக்களை எரிக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வெயில் 100 டிகிரிக்கு அருகில் சென்றுள்ளது. அது எப்போது 100ஐ தொடும் என்ற பயத்தில் சென்னை வாசிகள் மிரண்டு போயுள்ளனர். பகல் நேரத்தில் யாரும் வெளியில் தலைகாட்டுவதே கிடையாது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
இரவில் காற்று அதிகமில்லாததால் மக்கள் புழுக்கத்தால் வெந்து அவிகின்றனர். இந்நிலையில் நாளை முதல் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் துவங்குவதால் மே 28ம் தேதி தொடர்ந்து 23 நாட்களை எப்படி சமாளிப்பது என தமிழக மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இப்படி சமாளிக்கலாம்...
மக்கள் வெயில் உக்கிரத்தால் உண்டாகும் கொப்பளங்கள், கட்டிகள், சின்னம்மை போன்ற உஷ்னம் சம்பந்தமான நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ள சில டிப்ஸ்:
டீ, காபி போன்றவற்றை தவிர்த்துவிட்டு மோர், இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை பருகலாம். தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.
வெயில் அதிகமிருந்தால் உடலில் உள்ள நீர் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். நல்ல தளர்ச்சியான பருத்தி ஆடைகள் அணியுங்கள். இறுக்கமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை தவிர்க்கவும்.
அதேபோல் ஆடைகள் லேசான வண்ணத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். லேசான வண்ணம் கொண்ட ஆடைகளில் அழுக்குபட்டுவிட்டால் துவைப்பது கடினம் என சோம்பேறி தனம் கொண்டு, கருப்பு ஆடைகளை அணிவதை தவிர்ககவும்.
வெளியே கருப்பு, உள்ளே வெள்ளை...
வெளியில் செல்லும் போது மறக்காமல் குடையை எடுத்து கொள்ளவும். வண்ணமயமான குடைகளை கொண்டு செல்வதை விட குடையின் வெளிபக்கம் கருப்பாகவும், உள்பக்கம் வெள்ளை நிறமாக இருக்கும் வகையிலான குடைகளை பயன்படுத்துங்கள். இது உங்களை வெயிலில் இருந்து அதிகம் பாதுகாக்கும்.
வெயில் காலம் முடியும் வரை சாப்பாட்டில் காரத்தை குறைத்து கொள்ளவும். சிக்கன் போன்ற உஷ்னத்தை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
பிறகு முக்கியமானது, தேவையில்லாமல் வெளியில் சென்று வெயிலி்ல் வறுபடுவதைத் தவிர்க்கவும்.












Click it and Unblock the Notifications