திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் வசூல் 92 லட்சம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் மாதம் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.92 லட்சம் வசூலாகியுள்ளது.
இக்கோவிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜூன் மாதத்தில் மட்டும் 8-ம் தேதி மற்றும் 28, 29 தேதிகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் தூத்துக்குடி உதவி ஆணையர் ராஜாமணி, கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்ஷால், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி மற்றும் உள்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் 150 கோவில் பணியாளர்கள் உண்டியலை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதம் 26-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 28-ம் தேதி வரை வசூலான உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.92 லட்சத்து 43 ஆயிரத்து 622 ரூபாய் 75 காசு. இதில் அன்னதான உண்டியலில் கிடைத்த 3 லட்சத்து 10 ஆயிரத்து 918 ரூபாயும், காசோலை பராமரிப்பு உண்டியலில் கிடைத்த 44 ஆயிரத்து 20 ரூபாய் 50காசும் அடங்கும். இது தவிர 1964 கிராம் தங்கமும், 9240 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது.