யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய சக்தி வேலி - வனத்துறை அமைச்சர் செல்வராஜ்
பழனி: காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சப்படுத்தி துன்புறுத்துவதை தடுக்கும் வகையில் 1,400 கி.மீ. தூரத்திற்கு சூரிய சக்தி வேலி அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி அருகே, காட்டு யானை தாக்கி ராஜ் என்பவர் கடந்த சில திங்களுக்கு முன்பு இறந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்தில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆய்வு நடத்தினார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சத்திரம் வனப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. 2005 முதல் இது வரை, யானை தாக்கி ஆறு பேர் இறந்துள்ளனர்.
ஐந்தாண்டுகளில், பயிர் சேதம் குறித்து 292 புகார்களும், நஷ்ட ஈடாக 12 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், யானை, புலி, சிங்கம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புக்கு, நிவாரணம் தரப்பட்டது. தற்போது காட்டு பன்றி, காட்டு மாடுகளால் சேதம் ஏற்பட்டாலும் நிவாரணம் தர, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
யானைகளால் சேதம் ஏற்படுவதை தவிர்க்க, 909 கி.மீ. வேலி அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 1,400 கி.மீ. தூரத்திற்கு சூரிய சக்தி வேலி அமைக்கப்படும்.
வனப்பகுதியில் இருந்து யானைகள், ஊருக்குள் வராமல் செல்வதை தடுக்க, அவைகளுக்கு தேவையான தீவனங்கள், தண்ணீர் வசதி காட்டுக்குள் கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications