அரசு விளம்பரங்களில் ராஜீவுக்கே முதல் மரியாதை-கண்டு கொள்ளப்படாத லால் பகதூர் சாஸ்திரி

கடந்த 10 வருடங்களில் லால் பகதூர் சாஸ்திரி தொடர்பான விளம்பரங்களுக்கா செலவிட்ட தொகையை விட 3 மடங்குத் தொகையை கடந்த 2 மாதங்களில் மட்டும் ராஜீவ் காந்திக்காக வாரியிறைத்துள்ளனராம்.
மத்திய அரசின் விளம்பரப் பிரிவு (டி.ஏ.வி.பி.), கடந்த 2 மாதங்களில் ராஜீவ் புகழ் பாடுவதற்காக ரூ. 3 கோடியை செலவிட்டுள்ளது. அதேசமயம், கடந்த பத்து ஆண்டுகளில் சாஸ்திரி குறித்த விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகை வெறும் ரூ. 87 லட்சம் மட்டும்தான். சாஸ்திரியும் ஒரு முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையைச் சேர்ந்த அஜய் மராத்தே என்பவர் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட கேள்விக்கு இந்த விளக்கத்தை அளித்துள்ளார் மத்திய பொது தகவல் அதிகாரி மட்டு ஜே.பி. சிங்.
அதேசமயம், பிற முன்னாள் பிரதமர்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தகவல் அளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று மட்டு ஜே.பி.சிங் மறுத்துள்ளாராம்.
ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலங்களில் அமல்படுத்தப்பட்ட, அமல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களுக்கு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களை மட்டுமே பெருமளவில் சூட்டி வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அதேசமயம், மகாத்மா காந்தி உள்பட நாட்டுக்காக பாடுபட்ட பல மாபெரும் தலைவர்களின் பெயர்களில் பெரிய அளவில் எந்தத் திட்டமும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications