ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: அமைச்சர் தகவல்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனமும், பெரியார் ஈவேரா-நாகம்மை அறக்கட்டளையும் இணைந்து தொல்லியல் ஆய்வு கருத்தரங்கை நெல்லையில் கடந்த மாதம் நடத்தியது.
இந்த கருத்தரங்களில் பேசிய தொல்லியல் அறிஞர்கள் பலரும், பழங்காலத்தில் தென்னிந்தியாவில் மிகப்பெரிய நகரமாக ஆதிச்சநல்லூர் விளங்கியுள்ளதை குறிப்பிட்டு பேசினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள 134 ஏக்கர் புதைகுழியை மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நெல்லை வந்தார். ஆதிச்சநல்லூர் சென்று பார்வையிட்டார்.
அங்கு ஏற்கனவே அகழாய்வு நடத்தப்பட்ட இடத்தையும், கண்டெடுக்கப்பட்ட தாழிகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
'கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், தமிழ் கலாச்சார பண்பாடு மற்றும் பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றிய ஆதாரங்கள் இடம் பெற உள்ளன.
இதற்காக ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகலை ஆய்வு செய்ய வந்துள்ளேன். மேலும் ஆதிச்சநல்லூர் புதைகுழி குறித்து கோவை உலக தமிழர் மாநாட்டிலும் ஆய்வு நடத்தப்படும்.
ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நவதிருப்பதி சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆதிச்சநல்லூரையும் பார்வையிட அங்கு அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications