கொல்லங்கோடு திருவிழாவில் 1343 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை!
மார்த்தாண்டம்: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பரணி தூக்க திருவிழாவில் இந்த ஆண்டு 1343 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1,500 ஆண்டுகளாக கொல்லங்கோடு வெங்கஞ்சி வட்டவிளை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் தூக்க நேர்ச்சை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்தாண்டு பங்குனி பரணி தூக்க திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த கோவிலில் நடக்கும் தூக்க நேர்ச்சை பிரசித்தி பெற்றதாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தை நோய் நொடியின்றி நல்லறிவு பெற்று வளரவும் அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் ஒரே வண்டியில் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் தங்கள் கைகளில் பச்சிளம் குழந்தைகளை தாக்கியவாறு ஒருமுறை கோயிலை வலம் வரும் போது தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
பச்சிளம் குழந்தைகளுடன் தூக்கக்காரர்கள் அந்தரத்தில் தொங்கும் இந்த கண்கொள்ளாக் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
தமிழகத்தில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் இட்டகவேலி, மூவோட்டுகோணம், கொல்லங்கோடு ஆகிய கோயில்களில் மட்டுமே தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
இதிலும் கொல்லங்கோட்டில் மட்டுமே ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு 4 தேவி தூக்கம், 1286 குழந்தைகள் தூக்கம், 25 ரிசர்வ் தூக்கம் என மொத்தம் 1315 தூக்கம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தூக்க நேர்ச்சையி்ன் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
இந்த ஆண்டு அதிகமாக தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. குலுக்கல் முறைப்படி தூக்க நேர்ச்சை பதிவு செய்தல் மற்றும் தூக்கம் எழுதி நிறுத்தல் நடந்தது.
இந்தாண்டு 4 தேவி தூக்கம், 1343 குழந்தைகள் தூக்கம், 27 ரிசர்வ் தூக்கம் என 1374 தூக்கம் நிறைவேற்றப்படுகிறது.
10ம் நாள் விழாவான வரும் 20ம் தேதி காலை தூக்ககாரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், தூக்க நேர்ச்சையை பார்வையிட அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளல், தொடர்ந்து தூக்க நேர்ச்சை நடக்கிறது.