மெரீனா கடற்கரையை அழகுபடுத்த ரூ. 80 லட்சத்தில் நவீன எந்திரங்கள்
சென்னை: மெரீனா கடற்கரையை அழகுபடுத்தவும், கடற்கரையில் சேரும் குப்பைகளை நவீன முறையில் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் ரூ. 80 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த எந்திரங்கள் மற்றும் வாகனங்களை மேயர் மா. சுப்பிரமணியன் ஊழியர்களிடம் கொடுத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கடற்கரை மணலில் இருந்து குப்பையை பிரிக்கும் பணிகளுக்காக மட்டும் ரூ. 33 லட்சம் மதிப்பிலான எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பை சுத்தப்படுத்தும் திறன் கொண்டது.
சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்காக ரூ. 26.52 லட்சம் மதிப்பிலான 3 சிறிய வகை லோடர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர புல்களை வெட்டி சீராக்கும் லான் மூவர், மரக் கிளைகளை சீர் செய்வதற்காக ட்ரீ ப்ரூனர், பிரஷ் கட்டர், ஹெட்ஜ் ட்ரிம்மர் உள்ளிட்ட கருவிகள் விழாவில் ஊழியர்களிடம் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, மெரீனா நீச்சல் குளத்தில் நுழைவுச் சீட்டு வழங்குவதில் இருந்த குறைபாட்டை போக்குவதற்காக, ரூ. 1.70 லட்சம் மதிப்பில் தானியங்கி நுழைவுச் சீட்டு எந்திரம் மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டுள்ளது.
எந்திரத்துக்குள் செலுத்தப்படும் நாணயம் அல்லது ரூபாய் நோட்டுக்கு, சரியான சில்லரை திருப்பி வழங்கப்படும். அச்சடித்து வழங்கப்படும் நுழைவுச் சீட்டில் நேரம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications