நாகர்கோவில் அருகே ரூ. 500 கோடிக்கு கோபுரக் கலசத்தை பேரம் பேசிய கும்பல்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கீழசரக்கல்விளை தேவி முத்தாரம்மன் கலசத்தில் கதிர்வீச்சு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இக்கோபுர கலசத்திற்கு ரூ.500 கோடி தருவதாக கேரளாவைச் சேர்ந்த சிலர் பேரம் பேசியதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் திரண்டுவிட்டனர்.
நாகர்கோவில் அருகே கீழசரக்கல்விளை தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புனரமைக்கப்பட்டது. அப்போது கோபுரம் கட்டப்பட்டு அதில் கலசம் வைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு இரவு நேரம் நல்ல இடியுடன் மின்னலும் இருந்தது. இந்த நிலையில் இந்த கோபுர கலசத்தில் இருந்து இள நீல நிறத்தில் ஒரு திரவம் கசிய துவங்கியது என கூறப்படுகிறது. இதனை எவரும் கவனிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த மூன்று பேர் கீழசரக்கல்விளைக்கு வந்தனர். ஊர் நிர்வாகிகளை சந்தித்தனர். தேவி முத்தாரம்மன் கோவில் கலசத்தில் இடி விழுந்துள்ளது. இதனால் கோபுர கலசத்தில் ஒருவித கதிர்வீச்சு பரவியுள்ளது. கதிர்வீச்சை சாட்டிலைட் மூலம் தெரிந்து கொண்டோம். இதனால் கலசத்தை எடுக்காமல் கதிர்வீச்சை நாங்கள் பயன்படுத்தி கொள்கிறோம். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என கூறினர்.
இதற்காக நாங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறோம். பொதுவாக 500 கோடி வரை தருகிறோம் என கூறியுள்ளனர். அதனை கேட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கூறியதை அடுத்து ஊர் நிர்வாகிகள் கோபுர கலசத்தை பார்க்கும்போது ஊதா நிறத்தில் கறை படிந்து இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் வேறு சிலரும் கோபுர கலசத்தை பார்வையிட்டு அவர்களு்ம் கோபுர கலசத்தை கேட்டனர். இதையடுத்து ஊர் நிர்வாகிகள் ஊர் கூட்டத்தை உடனடியாக கூட்டினர். இதில் ஒரு சிலர் இதனை கொடுக்கலாம் என கருத்து தெரிவித்தனர். ஆனால் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications