கத்தார் சிறையில் 32 தமிழக மீனவர்கள்-பத்திரமாக மீட்க அரசுகளுக்கு கோரிக்கை
நாகர்கோவில்: கத்தார் நாட்டுசிறையில் 32 தமிழக மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக அடைபட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தார் நாட்டுக் கடல் பகுதிக்குள் அவர்கள் நுழைந்ததால் அவர்களை கத்தார் நாட்டு கடலோரக் காவல் படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில் 18 பேர் கடையப்பட்டனத்தைச் சேர்ந்தவர்கள். 14 பேர் குமரிமாவட்டம் இனையம், முட்டம், பெரியவிளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அனைவரும் சவூதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர். ஆறு படகுகளில் கத்தார் கடல் பகுதியில் இவர்கள் சென்றபோது கைது செய்யப்பட்டனர். ஜூலை 10ம் தேதி அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவிடம் அவர்களது குடும்பத்தினர் சார்பாக கிறிஸ்தவ பாதிரியார் சர்ச்சில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
32 பேரையும் மீட்க அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் அனைவரும் ஜெனியா -2 என்ற சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications