அண்ணா பிறந்தநாள்: பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
2010ம் ஆண்டிற்கான முதல் நிலைப்போட்டிகள் இந்த மாதம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளன.
அதன் தொடர்ச்சியான இறுதிப் போட்டிகள், பள்ளிகளுக்கு அடுத்த மாதம் 2ம் தேதியும், கல்லூரிகளுக்கு 3ம் தேதியும் நடைபெறும்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியருக்கு முதல் பரிசாக தலா ரூ.15,000மும், இரண்டாம் பரிசாக தலா ரு.10,000மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000மும், ஆறுதல் பரிசுகளாக இருவருக்கு தலா ரூ.3,000மும் வழங்கப்படும்.
அண்ணா பிறந்தநாள் விழாவுடன் நடக்கும் முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் முரசொலி அறக்கட்டளை தலைமை நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் பரிசளிப்பார். அதே போல 3ம் தேதி நடக்கும் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் பரிசளிக்கவுள்ளார்.