80-வது பிறந்த நாள் கொண்டாடும் லால்குடி ஜெயராமன்: 18, 19 தேதிகளில் கொண்டாட்டம்

இசை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் லால்குடி ஜெயராமன். இவர் தனது இசைப் பயணத்தை 12 வயதில் தொடங்கினார். தொடர்ந்து 68 ஆண்டுகளாக இசைப் பணியாற்றி வருகிறார்.
வயலின் வாசிப்பதில் மேதையான இவரிடம் சீடர்களாகச் சேர பலரும் போட்டி போடுவர். இவரின் சீடர்கள் பலர் இசையில் ஜாம்பவான்களாக உள்ளனர்.
உள்நாட்டில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் தன் வயலின் வாசிப்பால் பலரை அசத்தியுள்ளார். தான் இசை அமைத்த ஒரே படமான சிருங்காரத்திற்காக தேசிய விருது பெற்றவர். மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கி கௌரவித்தது. இது தவிர்த்து இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இசைப் பயணத்தில் நெடுந்தூரம் கடந்த லால்குடி ஜெயராமனின் 80-வது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி வருகிறது. இதை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். லால்குடி-80 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த விழா சென்னை மியுசிக் அகாடமியில் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கின்றன.
கொண்டாட்டத்தின் முதல் நாளான 18-ம் தேதி ராக-ரசா', போர்மோஸ்ட்', லால்குடி பாடாசுந்தரம்' என்னும் 3 சி.டி.க்கள், போதகம்' என்னும் டி.வி.டி. வெளியீட்டு விழா நடக்கின்றது. இவற்றை தமிழக ஆளுநர் பர்னாலா பெற்றுக் கொள்கிறார். இதையடுத்து லால்குடி ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒளிப்பதிவாளர் மதுஅம்பட் லால்குடி அவர்களைப் பற்றி ஒரு குறும்படம் தயாரித்துள்ளார். அந்தப் படம் 19-ம் தேதி அன்று திரையிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜெயராமனின் சீடர்களின் சிறப்பு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றது.
இதற்கான ஏற்பாட்டை லால்குடி ஜெயராமனின் மகன் ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணனும், மகள் லால்குடி விஜயலட்சுமியும் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications