கேரள அரசு மருத்துவமனையில் பகீர்: இறந்தவருடன் படுத்திருந்தவர் அதி்ர்ச்சியில் பலி
கோட்டயம்: அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளின் அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த மற்றொரு நோயாளி, அதிர்ச்சியில் மரணமடைந்தார்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள அரூர் கோடம் துருத்தி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன். தேங்காய் வெட்டும் தொழிலாளி. தென்னை மரத்தில் இருந்து விழுந்ததில் நடக்க முடியாமல் இருந்தார்.
இவருக்கு சிறுநீரகக் கோளாறும் இருந்ததால் கடந்த வாரம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரு படுக்கையில் 2 நோயாளிகள் இருந்தனர்.
வேலாயுதத்துடன் இன்னொரு நோயாளி படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவருடன் இருந்த நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சமயத்தில் வேலாயுதத்தின் உறவினர்களோ, இறந்தவரின் உறவினர்களோ அருகில் இல்லை.
தனது படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இறந்ததை கண்ட வேலாயுதன் அதிர்ச்சி அடைந்தார். அவரால் படுக்கையை விட்டு எழமுடியாததால் இறந்தவர் உடல் அருகே ஒரு மணி நேரம் படுத்திருந்தார்.
அதன்பின் அங்கு வந்த உறவினர்கள் வேலாயுதனை வேறு படுக்கைக்கு மாற்றினர். இந்நிலையில் வேலாயுதன் மறுநாள் இறந்தார். இது குறித்து வேலாயுதத்தின் உறவினர்கள் கோட்டயம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதில் இறந்தவர் உடல் அருகே படுக்க வைக்கப்பட்டிருந்ததால் தான் வேலாயுதன் அதிர்ச்சியில் இறந்துள்ளார். இறந்த நோயாளியின் உடலை 1 மணி நேரமாக அகற்றாமல் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் கோட்டயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.